இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியிருப்பதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தை தமது நாட்டின் ஒரு பகுதியாக உரிமை கோருவது சீனாவின் வாடிக்கை. அருணாச்சல பிரதேசத்துக்கு மத்திய அமைச்சர்கள் யார் சென்றாலும் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அதேபோல் அருணாச்சலப் பிரதேசத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டாலும் கூட சீனா சவுண்டுவிட்டுப் பார்ப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அருணாச்சல பிரதேச எல்லைகளில் அண்மையில் சீனா மிகப் பெரும் ராணுவ குடியிருப்புகளை அமைத்திருந்ததும் அம்பலமானது.
இப்போது சீனா புதிய அடாவடியைக் காட்டியுள்ளது. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் 15 பகுதிகளுக்கு சீனா புதிய பெயரை சூட்டியிருக்கிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சீனா வெளியிட்டிருப்பதுதான் சர்ச்சையாகி உள்ளது. இதற்கு முன்னர் 2016-ம் ஆண்டும் இதேபோல் ஒரு அட்டூழியத்தை சீனா செய்திருந்தது.
அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகளுக்கு புதிய பெயர் சூட்டுவதற்கு சீனா அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருக்கிறதாம். குடியிருப்புகள், ஆறுகள் மற்றும் மலைகள் என மொத்தம் 15 இடங்களுக்கு இப்படி புதிய பெயரிட்டிருக்கிறதாம் சீனா. இதனை மத்திய அரசு மிகக் கடுமையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. சீனா புதிய பெயர்களை சூட்டுவதாலேயே உண்மையான யதார்த்த நிலையை மாற்றிவிடவும் முடியாது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.