• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நாளை முதல் வர இருக்கும் புதிய மாற்றங்கள்

Byவிஷா

Jan 31, 2024

நாளை முதல் கேஸ் சிலிண்டர் விலை, தேசிய பென்சன் திட்டம், ஃபாஸ்டேக் செயல்முறை மற்றும் ஐஎம்பிஎஸ் முறையில் பணபரிமாற்றம் போன்ற பல்வேறு திட்டங்களில் புதிய மாற்றங்கள் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் பிப்ரவரி 1ஆம் தேதி சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படும். விரைவில் தேர்தல் வரவிருப்பதால் சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு உள்ளது. தேசிய பென்சன் திட்டத்தில் (NPS) மிகப் பெரிய மாற்றம் வருகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தேசிய பென்சன் திட்டத்தின் விதிமுறை மாற்றப்படுகிறது. பென்சன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவின் படி இனி தேசிய பென்சன் திட்ட கணக்கில் இருந்து 25 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை எடுக்க முடியாது.
வண்டிகளில் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டாக் முறையில் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. அதன்படி, ஃபாஸ்டாக்கின் KYC சரிபார்ப்பு முழுமையடையவில்லை என்றால் ஜனவரி 31ஆம் தேதிக்குப் பிறகு அது செயலிழக்கப்படும். உடனடியாக KYC சரிபார்ப்பை முடிக்க ஃபாஸ்டாக் வைத்திருப்பவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் இனி IMPS முறையில் பணப் பரிவர்த்தனை செய்யும் போது இந்த விதிமுறையைக் கடைபிடித்தே ஆகவேண்டும். பிப்ரவரி 1ஆம் தேதி முதல் IMPS முறையில் பணம் அனுப்பும்போது ரூ. 5 லட்சத்துக்கு மேல் அனுப்பினால் அதற்கு பயனாளியின் பெயரை சேர்க்க வேண்டும். ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்க முதலீட்டுப் பத்திரத்துக்கான அடுத்த கட்ட வெளியீடு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும். பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 16ஆம் தேதி வரை தங்க முதலீட்டுப் பத்திரங்களை வாங்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வீட்டுக் கடன் வட்டியை சலுகை முறையில் வழங்குகிறது. அதாவது, வீட்டுக் கடன் பெறுவதற்கு செயலாக்கக் கட்டணம் போன்ற கூடுதல் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சலுகையைப் பயன்படுத்த ஜனவரி 31தான் கடைசி நாள். பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
பஞ்சாப் ர& சிந்த் வங்கியின் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டம் ’தனலக்ஷ்மி 444 நாள்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டம் ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இத்திட்டத்தில் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 7.4 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.9 சதவீத வட்டியும் கிடைக்கும்.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தினால் ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த விதி அமலுக்கு வருகிறது. காசோலை செலுத்துவதற்கான புதிய விதிகளையும் பேங்க் ஆஃப் பரோடா வங்கி அமல்படுத்த உள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் நேர்மறை பேமெண்ட் முறையைப் பின்பற்றுவது கட்டாயமாகும். புதிய விதிகள் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள காசோலைகளுக்கு மட்டும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.