• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Byவிஷா

Jul 1, 2025

ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் நெல்லையப்பர் கோவிலில் ஆனிததிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.
நேற்று நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக நெல்லையப்பர் கோவிலில் தேருக்கு ரூ.6.5 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 1300 அடி நீளத்தில் புதிய வடம் கயிறு பொருத்தப்பட்டது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். திருவிழாவின் 9வது நாளில் சுவாமி, அம்பாள், விநாயகர், சண்முகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தேர்கள் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு 4 ரத வீதிகளிலும் வலம் வரும்.
இந்த ஆண்டு ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் இன்று ஜூன் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஜூலை 8ம் தேதி வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த தேரோட்ட நிகழ்வில், பெரிய தேரான சுவாமி தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள். இந்த தேர் 450 டன் எடையும், 82 அடி உயரமும், 28 அடி அகலமும் கொண்டதாகும்.
முன்னதாக கண்ணாடி இழை கூண்டு அகற்றப்பட்டு சுவாமி தேர் உள்ளிட்ட 5 தேர்களும் தீயணைப்பு வீரர்களால் தண்ணீரை பீச்சி அடித்து சுத்தப்படுத்தப்பட்டது. தொடர்ந்து சாரம் கட்டும் பணி, அலங்கார துணிகள் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், சுவாமி தேருக்கு புதிய வடம் பொருத்தும் பணி நடைபெற்றது.
கடந்த ஆண்டு தேரோட்டத்தின் போது 4 முறை சுவாமி தேருக்கான வடம் கயிறு அறுந்தது. அதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் இம்முறை ரூ.6.5 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 1300 அடி நீளத்தில் புதிய வடம் கயிறு வாங்கப்பட்டுள்ளது.
நேற்று கொடியேற்றத்துடன் ஆனி திருவிழா தொடங்கிய நிலையில் மாற்று வழியில் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படுகின்றன. இதே போல் ரத வீதிகளில் செல்லும் பேருந்துகளும் பாரதியார் தெரு வழியாக இயக்கப்படுகின்றன.