நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காவல் நிலையம் செல்லும் சாலை, சுபாஷ் நகர் ஆகிய பகுதிகளில் சாலையோரம் வைக்கப்பட்ட மரங்களை சில தினங்களுக்கு முன்பு இரவு நேரங்களில் வெட்டியுள்ளனர். இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காத நிலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திராவிட விடுதலை கழகம், விசிக கட்சி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்திய போராட்டக்காரர்கள், மரம் வெட்டிய நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.