நாகாலாந்து பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நாகாலாந்து மாநிலத்தில் கிளர்ச்சியாளர்கள் என்று கருதி பொதுமக்களை அசாம் ரைஃபில்ஸ் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் 13 பேர் வரை உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள், இதுதொடர்பாக கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவையில் பேசும்போது, இது மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் தீவிரமான பிரச்சினை. இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க வேண்டும்” என்றார்.
அதுபோன்று ஆர்ஜேடி எம்.பி மனோஜ் ஜா மற்றும் திருணமூல் காங்கிரஸ் எம்பி சுகேந்து சேகர் ராய் ஆகியோர் நாகாலாந்து கொலைகள் தொடர்பாக நோட்டீஸ் கொடுத்தனர். 12 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்தும், நாகாலாந்து துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை முதலில் 12 வரை ஒத்திவைக்கப்பட்டது.