சிவகங்கையை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நகராட்சித் தலைவர் சிஎம்.துரைஆனந்த் கடிதம் அனுப்பினார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: சிவகங்கை கடந்த 1964-ம் ஆண்டு நகராட்சியானது. கடந்த 1984-ம் ஆண்டு மூன்றாம் நிலையில் இருந்து 2-ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 1998-ம் ஆண்டு முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது சிவகங்கை நகராட்சியில் 60,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 6.97 சதுர கி.மீ., பரப்பு கொண்டதாக உள்ளது. சராசரி ஆண்டு வருவாயாக ரூ.14.92 கோடியாக உள்ளது.
மேலும், இந்நகராட்சியுடன் சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைத்தால் நகர எல்லை விரிவடையும். இதன்மூலம் மக்கள்தொகை, வருவாயும் அதிகரிக்கும். முதற்கட்டமாக தற்போதுள்ள நகராட்சி எல்லை அடிப்படையிலேயே தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தலாம்.
மேலும் சிவகங்கை மாவட்டத் தலைநகராக இருப்பதால் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதுதவிர கல்வி, வியாபாரம் உள்ளிட்டவைக்காகவும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தோர் வந்து செல்கின்றனர். இதனால் தேர்வுநிலை நகராட்சி தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
![](https://arasiyaltoday.com/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-06-15-at-3.07.29-PM.jpeg)