• Sat. Apr 20th, 2024

நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு ஒரே நாளில் ரூ.50 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது அமைச்சர் தகவல்

திமுக அரசின் புதிய திட்டத்திற்கு ஒரே நாளில் ரூ.50 கோடி நிதியுதவி கிடைத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 23-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு, புதிதாக பெயின்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் ஈடுபட்டுள்ள இந்த செயல் திறனற்ற திமுக அரசு, கடந்த 19ம் தேதியன்று அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தங்கிலீஷில் நம்ம ஸ்கூல் என்று நாமகரணம் சூட்டி இந்த திமுக அரசு மீண்டும் அதை துவக்கி வைத்திருக்கிறார். மேலும், நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சுமார் ரூ. 3 கோடி செலவழிக்கப்பட்டதாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தும் நம்ம ஸ்கூல் திட்டத்தை கொச்சைப்படுத்துவதா என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நம்ம ஸ்கூல் திட்ட தொடக்க விழாவிற்காக ஒரேநாளில் ரூ.3 கோடி செலவு செய்யப்பட்டது என கூறுவதெல்லாம் ஆதாரமற்றது. திமுக அரசின் புதிய திட்டத்திற்கு ஒரே நாளில் ரூ.50 கோடி கிடைத்துள்ளதை பொறுக்க முடியாத வயிற்றெரிச்சல். ஓராண்டு முழுமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு, ஆய்வு கூட்டங்களுக்கும் சேர்த்தே ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *