உலகையே அச்சுறுத்தி வரும் உருமாறிய வைரஸ் ‘ஒமைக்ரான்’ கர்நாடகாவில் 2 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நேற்றிரவு தென்னாப்ரிக்காவில் இருந்து பெங்களூரு வந்துள்ளதாக தெரியவந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் நிருபர்களிடம் பேசும்போது, இந்தியாவில் 2 பேருக்கு ‘ஒமைக்ரான்’ கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 66 மற்றும் 46 வயதான ஆண்கள் 2 பேருக்கு முதலில் கோவிட் உறுதியானது. தொடர்ந்து, நடந்த பகுத்தாய்வு பரிசோதனையில் இருவரும் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
அவர்களுக்கு லேசான அறிகுறி மட்டுமே தென்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதனால், யாரும் பீதியடைய தேவையில்லை.
ஒமைக்ரான் தொற்று 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது. மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் ஒமைக்ரான் சூழ்நிலை குறித்து பிரதமருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.