கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் மாணவர்கள் முககவசம் அணிந்து வரவேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா 4 வது அலை ஜூன் மாதத்தில் உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போலவே தற்போது நாடு முழுவதும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் வெகுவாக குறைந்திருந்த தொற்று கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி விட்டது.
மேலும் கொரோனா தொற்றை போலவே உலக முழுவதும் குரங்கு அம்மை தொற்றும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குவைத், சார்ஜா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வரும் பயணிகளை, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: “சென்னை, மதுரை, கோவை, திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பும் கண்டறியப்படவில்லை.
பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் தொடர்ந்து அணிவது நல்லது. விரைவில் இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும்.
சட்டவிரோதமாக கருமுட்டையை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.