• Sat. Apr 20th, 2024

மீண்டும் ஆண்மை சர்ச்சை – அதிமுகவை சீண்டும் நயினார் நாகேந்திரன்

சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச கூடிய ஒரு அதிமுகவை பார்க்க முடியவில்லை என்றும் மக்கள் பிரச்சனைகளை பாஜக தான் தைரியமாக பேசி வருவதாக பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் லாவண்யா மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் திமுக ஆட்சி காலம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது, ஆனால் இந்த 4 ஆண்டு காலம் அவர்கள் ஆட்சி நீடிக்குமா என்று உறுதியாக கூற முடியாது, இந்த ஆட்சிக்கு பின்னர் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் நேரத்தில் எப்படி ஒரு எழுச்சி இருந்ததோ அதே எழுச்சி தற்போது அண்ணாமலையை தலைவராக உள்ள இந்த நேரத்தில் எழுந்துள்ளது. தமிழகத்தின் எதிர்கட்சி போல மக்கள் பிரச்சனைகளை பாஜக தான் பேசி வருகிறது.

சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக ஆண்மையோடு பேச கூடிய ஒரு அதிமுகவை பார்க்க முடியவில்லை, எதிர்கட்சியாக இல்லாமல் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே. மேலும் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரண்டு தவறுகளை இழைத்த காரணத்தால் ஆட்சி அமைக்க முடியாமல் சென்றது. பாஜக தயவோடு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். இந்த தோல்வியும் நல்லதுதான், வரும் காலங்களில் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும்.

இது போன்று அதிமுக அசிங்கபடுவது ஒன்றும் புதிதல்ல. ஓ.பன்னீர் செல்வத்தை பார்த்து ஆடிட்டர் குருமூர்த்தி ஆண்மை இருக்கிறதா என்று ஊடகங்களின் மத்தியில் பேசியது அன்று சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அன்று அதிமுகவும் வாய் திறக்கவில்லை. இப்போது இந்த அளவுக்கு அதிமுக பாஜகவிற்கு இடம் அளித்துள்ளது. அனைத்து தரப்பிலும் பாஜக நெருக்கடி கொடுத்த போது ஓபிஎஸ் எடப்பாடியை பேசி சமரசம் செய்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலின் போது கூட எம்.ஜி.ஆரை பாஜக முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்தனர். இப்படி 5 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற அதிமுகவினர் உழைத்துவிட்டு, வெற்றியை பாஜக அறுவடை செய்துவிட்டனர். சட்டமன்றத்தில் கால் ஊன்ற அதிமுகவை பயன்படுத்தி கொண்டு இன்று ஆண்மை இருக்கிறதா ? இல்லையா என்று பெண்ணை கட்டி கொடுத்த மாமியார் போல பாஜக கேட்டுக்கொண்டிருக்க அதிமுக அனைத்து பலவீனத்தையும் இழந்துவிட்டது.
இப்போது அதிமுக சுதாரிக்கும் என்று எதிர்பார்க்காமல் இது அவர்களின் சொந்த கருத்து இதற்கு எல்லாம் கட்சி பொறுப்பேற்க்காது என்று ஜெயக்குமாரை விட்டு எடப்பாடி பேச விடுவார்.

இன்னும் அதிமுக என்ன என்ன சங்கடத்தை சந்திக்க போகிறதோ என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *