லைகா நிறுவனம் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப்புத்தாண்டையொட்டி இலண்டனில் மிகப்பெரிய விருந்து கொண்டாட்டம் நடத்துவது வழக்கம்.அதற்காகப் பல்வேறு நாடுகளில் லைகாவில் பணிபுரிபவர்களுக்கு அழைப்பு அனுப்புவார்கள்.திரைப்படத் தயாரிப்பை லைகா தொடங்கிய காலத்தில்இருந்து தமிழ்த்திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும் அவ்விருந்தில் கலந்து கொள்கிறார்கள்.கடந்த ஆண்டு சிறப்புவிருந்தினராக இருந்தவர் வடிவேலு. இவ்வாண்டு நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது.
இவ்வாண்டு லைகாவின் தமிழகத்தலைவர் தமிழ்க்குமரன் மற்றும் முன்னணி ஊழியர்கள்,ரெட்ஜெயண்ட் நிறுவனத்திலிருந்து செண்பகமூர்த்தி, இராஜா உள்ளிட்டோர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திலிருந்து நரேஷ், மெட்ராஸ் டாக்கீஸ் சிவாஆனந்த் ஆகியோரோடு மணிரத்னம், சுகாசினி, ஐஸ்வர்யா ரஜினி, சுந்தர்.சி, பிரதீப்ரங்கநாதன் ஆகிய பிரபலங்களையும் விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள்.
இவர்களில் மணிரத்னம் மட்டும் உடல்நலக்குறைவு என்று காரணம் சொல்லி விருந்து நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. மற்ற அனைவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களில் பிரதீப் ரங்கநாதன் இடம்பெற்றிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அவை என்ன?லவ்டுடே படத்தை முதலில் லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இதற்காகப் பல மாதங்கள் லைகா நிறுவனத்தில் காத்துக்கொண்டிருந்தார் பிரதீப்ரங்கநாதன். சில காரணங்களால் அது நடக்கவில்லை.அதன்பின் வெளியில் சென்று வெற்றியாளராக மாறியிருக்கிறார் பிரதீப்ரங்கநாதன். இதனால் மீண்டும் லைகா அவரை அழைத்துப் படம் செய்யச் சொல்லியிருக்கிறதா? என்கிற கேள்வி எழுகிறது.அடுத்த படத்தை லைகா தயாரிப்பதில் என்ன ஐயம் வேண்டிக்கிடக்கிறது என்கிற கேள்வி வரலாம்.ஏஜிஎஸ் நிறுவனத்தில் லவ்டுடே தொடங்கியபோதே அடுத்து ஜெயம்ரவியை வைத்து அந்நிறுவனத்துக்கு ஒரு படம் இயக்குவது என ஒப்புக்கொண்டிருந்தார் பிரதீப்ரங்கநாதன்.
இப்போது அதைவிட்டுவிட்டு லைகாவுக்குப் போய்விட்டாரா என்பதுதான் ஐயம்.ஆனால், பழக்கத்தின் காரணமாக அவரை இலண்டன் அழைத்திருக்கிறார்களே தவிர இப்போதைக்கு அவரை வைத்துப் படம் தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் சொல்கிறார்கள்.
என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்?