• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை கம்மங்கூழ் கடையில் அலைமோதும் கூட்டம்..!

Byவிஷா

Mar 7, 2023

மதுரையில் உள்ள ஒரு கம்மங்கூழ் கடையில், கூழ் வாங்கி குடித்தால், மோர் இலவசமாகத் தரப்படுவதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நமது பாரம்பரியமான உணவுகளில் ஒன்றுதான் கம்மங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ்களில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. ஒரு நாள் முழுவதற்கும் தேவைப்படும் சக்தி இதில் இருப்பதால்தான் நமது உழவர்கள் இதனை தற்பொழுது வரை தினமும் உணவாக உட்கொண்டு வருகின்றார்கள்.
நகரப்புறங்களில் கம்மங்கூழ், கேழ்வரகு கூழ் போன்றவற்றை தினமும் உண்பது அரிதுதான். ஆனால், கோடை காலத்தில் மோருடன் சேர்ந்து கூழ் குடித்தால் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் உடல் குளிர்ச்சியாக இருக்கும். வெப்பத்தை தணிக்க மதுரையில் உள்ள மதுரா கல்லூரி அருகே கூழ் இருக்கும் கடைகளில் பொது மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த கடையில் கம்மங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் போன்றவற்றை இவர்களே வீட்டில் தயார் செய்து விற்பனை செய்கின்றனர். இந்த கடையில் கூழ்வாங்கி குடித்தால் அனைவருக்கும் மோர் இலவசமாக வழங்கப்படுகின்றது.
மேலும், இந்த கடையின் அல்டிமேட் என்னவென்றால் கம்மங்கூழ் கேழ்வரகு கூழ் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள வெங்காயம், வத்தல், மாங்காய், நெல்லிக்காய், கருவாடு கூட்டு கத்திரிக்காய் கூட்டு மிளகாய் அப்பளம் என விதவிதமாக விற்கப்படுகின்றது. இக்கடையில் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பெரியவர்கள் என அனைவருமே மோர் போன்றவற்றை பருகுவதனால் இப்பகுதியில் எப்பொழுதுமே கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கின்றது.
இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறும் பொழுது, இது நமது பாரம்பரியமான உணவு என்றும் மிகுந்த சத்து இருப்பதாகவும், சர்க்கரை அளவை அளவாக வைக்க உதவும் வகையில் இருப்பதாகவும், எந்தவித கலப்படமும் இல்லாமல் இயற்கையான முறையில் இக்கடையில் செய்து தருவதாகவும், மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்றும் கூறுகின்றார்கள்.