திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து அமைப்பினரால் திருப்பரங்குன்றம் கோயில் 16 கல் மண்டபம் முன்பு நாளை (பிப்ரவரி 4) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த போராட்டத்தை நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இப்பிரச்சினை காரணமாக இருதரப்பினர் இடையே அசாதாரண சூழல் நிலவும் காரணத்தால் மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்து முன்னணி நாளை நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி நீதிபதி தனபால் முன்பு இன்று அவசர முறையீடு செய்யப்பட்டது. அப்போது இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி கூறினார்.