நில அளவை களப்பணியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பணிச் சுமையை குறைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நில அளவை களப்பணியாளர்கள், மாநில பொருளாளர் ஸ்டேன்லி தலைமையில் மாநிலச் செயலாளர் முத்துமுனியாண்டி ராஜேந்திரன் மாரிமுத்து, முருகன் பச்சையாண்டி ரகுபதி ஆகியோர் முன்னிலையிலும் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாநிலை போராட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநிலத் தலைவர் முருகையன் மாநில துணைத்தலைவர் சரவணன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
இந்த உண்ணாநிலை போராட்டத்தில் களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும், நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மாவட்ட அளவில் நவீன மறு நில அளவை திட்ட பணிகளை தனி உதவி இயக்குனர் தலைமையில் ஏற்படுத்திட வேண்டும், தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு எனும் பெயரில் ஊழியர்களை தண்டனை குற்றவாளிகள் போல் நடத்துவதை கைவிட வேண்டும், மாறிவரும் நில அளவை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நில அளவைத் துறையை மாற்றி அமைக்கும் முறையில் நில அளவை சார்ந்த மேம்படுத்தப்பட்ட தொழில் பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும், துறையில் பணி செய்து வரும் உரிமம் பெற்ற நில அளவர்களை தகுதியின் அடிப்படையில் நிரந்தர ஊழியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட 26 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது
இந்தப் போராட்டத்தில் மதுரை தேனி திண்டுக்கல் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்