

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த வழக்கு மறுவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த வழக்கில் கைதானவர்கள் மற்றும் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டவர்கள் என 220-க்கும் மேற்பட்டவர்களிடம் தற்போது மீண்டும் மறுவிசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. மேலும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் போலீசார் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.தற்போது விசாரணையானது நீண்டு கொண்டே செல்கிறது. ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் கடந்த மாதம் 29 மற்றும் 30-ந்தேதிகளில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சில கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை பெற வேண்டியிருந்ததால் பூங்குன்றனை இன்று மீண்டும் ஆஜராகும்படி போலீசார் கூறி இருந்தனர்.அதன்படி பூங்குன்றன் கோவை போலீஸ் பயிற்சி மையத்துக்கு வந்தார். அவரிடம் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். கொடநாடு எஸ்டேட் குறித்தும், ஜெயலலிதாவை சந்திக்க அங்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் பற்றியும், அங்கு நடைமுறையில் இருந்த செயல்பாடுகள், பணியாற்றிய நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.
