418 ஆண்டுகளுக்குப் பிறகு, நாளை (6.7.2022) குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால், நாளை அங்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நாளை 6.07.2022 அன்று மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கும்பாபிஷேகத்திற்கான பணிகளை அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த விழாவில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் காவல்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் வாகனம் நிறுத்தம், கழிவறை, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.