சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் நாளை காலை வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது சென்னைக்கு தென்கிழக்கே – கடலூருக்கு கிழக்கே நிலை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மெதுவான நகர்வு காரணமாக வட தமிழக மாவட்டங்களுக்குள் மேகங்கள் நகர்வதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி கரையை நோக்கி நகரத் தொடங்கியதும் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் கணித்துள்ளார்.அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மாவட்டங்களில் இன்று காலை முதல் நாளை காலை வரை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.