ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறு என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டி
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, “நேரு இந்தியாவின் தலைமை பொறுப்பை ஏற்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற மோசமான நிலைக்கு இந்தியா வந்திருக்கும். எராளமான கைதிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்யாதது ஏன்?. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில், சந்தேகத்தின் பேரில் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யாதது ஏன்?. இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா?. திமுகவுக்கும் எங்களுக்கும் பல கருத்து வேறுபாடு உண்டு. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை தவறு. கூட்டணி வேறு, கொள்கை வேறு. திமுக கூட்டணியில் இருந்தாலும் அழுத்தம் கொடுக்க முடியாது” என்று அவர் கூறினார்.