• Sun. Mar 16th, 2025

சென்னையில் இடைவிடாது பெய்த
மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னையில் நேற்று இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மாண்டஸ் புயலின்போது சென்னையில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் கரையை கடந்து அரபிக்கடல் பக்கம் சென்றவுடன் சென்னையில் வெயில் அடித்தது. வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பொழிந்தது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்வதும், பின்னர் ஓய்வதுமாகவே இருந்தது. கனமழையுடன் காலை பொழுது விடிந்தது. மழைப்பொழிவுக்கு இடையே மாணவ-மாணவிகள் பள்ளி-கல்லூரிகளுக்கு புறப்பட்டு சென்றனர். வேலைக்கு சென்ற ஊழியர்களும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
மழை பெரிய அளவில் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேரம் செல்ல, செல்ல வானில் கருமேகங்கள் கடுமையாக சூழ்ந்தது. இடைவிடாது மழை பெய்துக்கொண்டே இருந்தது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.
கனமழை நீடித்ததால் சென்னை மாவட்டத்தில் இயங்கும் பள்ளிக்கூடங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார். அதே போன்று திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு திரும்பினர்.