கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புகள் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்டு வருவதாகக் கூறினார்
காவல்துறையைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பாக நேற்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டமன்றம் தேவையா என்பது குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் சட்டமன்றத்திற்காக கட்டடங்களை அமைக்க முயற்சித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ராணி மேரி கல்லூரியில் சட்டமன்றத்தை கொண்டு வர முயற்சி மேற்கொண்டதாக செங்கோட்டையன் கூறினார்.110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடுவது என்பது துறையின் தேவைக்கும், மானியக் கோரிக்கைக்கும் ஏற்ப முதலமைச்சர் மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். இதனை அனைத்து முதலமைச்சர்களும் பின்பற்றி வந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கூடாது.
மந்தை புறம்போக்கு, நீர்வழி புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு உள்ளிட்ட நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் பட்டா வழங்கக் கூடாத நிலங்கள் குறித்து ஆய்வு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும், ஆலயங்கள் தொடர்பான புறம்போக்கு நிலங்களுக்கும் இதே நடைமுறை பொருந்தும் என்றும், சம்பந்தப்பட்ட துறையின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அனைத்து கேள்விகளுக்கும் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், கடந்த ஆட்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தபோது அமைச்சர் ரகுபதி உள்ளிட்டவர்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்ததாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
“விஜய்யை பிரதமர் வேட்பாளராக பார்க்க முடியுமா?”
தமிழக வெற்றி கழகம் குறுகிய காலத்தில் அரசியல் களத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவித்த செங்கோட்டையன், தமிழக மக்கள் அந்தக் கட்சியை நம்பி வாக்களித்துள்ளதாகவும் கூறினார்.

இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்துள்ளதாகவும், இரண்டே மாதங்களில் சின்னத்தைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக மக்களை காப்பதற்கும், அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கும் முதலமைச்சர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த செங்கோட்டையன் இந்திய பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்த முடியுமா? என்ற கேள்விக்கு, தன்னை சிக்கலில் மாட்டிவிடும் வகையில் இதுபோன்ற கேள்விகளைக் கேட்க வேண்டாம் என நகைச்சுவையாக பதிலளித்தார்.








