• Sat. Apr 20th, 2024

ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற மாநகராட்சி பள்ளி சமையல் கூடம்

Byமதி

Nov 27, 2021

ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1061 மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் மாலாவின் முயற்சியால் இந்த பள்ளியின் சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் கிடைத்துள்ளது.

முதலில் பள்ளியின் சமையல் கூடத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கண்ட தலைமை ஆசிரியர் மாலா, சமையல் கூடத்தை அழகுப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.

சமையல் கூடம் முழுவதும் டைல்ஸ் கொண்டு செப்பனிட்டு வர்ணம் அடிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களை சமையல் கூடத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கும் விதமாக பெற்றோர்களிடம் கல்விச்சீராக சமையல் கூடத்திற்கு தேவையான எவர்சில்வர் மற்றும் மண் பாத்திரங்கள் பெறப்பட்டது.

மேலும் மாணவிகளுக்கு சுகாதார முறையில் சமைக்கும் பொருட்டு ஆர்.ஓ தண்ணீர் பொருத்தி, அந்த நீரில் மட்டுமே சமைக்கவும், காய்கறிகளை சமைப்பதற்கு முன்பு மஞ்சள் நீரால் கழுவியும், சமைக்கும் சமையலர்கள் நகங்கள் வெட்டி இருக்க வேண்டும், வளையல் மற்றும் மோதிரங்கள் அணிந்து இருக்கக்கூடாது என்றும் முடி உணவில் விழாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்து சமையல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

அதை முறையாக சமையலர்கள் கடைப்பிடிக்கிறார்களா? என்பதை அறிய ஆசிரியர் குழுயும், 2 சிசிடிவி கேமராவையும் பொருத்தினார். மேலும் பள்ளியிலேயே ஆர்கானிக் காய்கறி தோட்டம் அமைத்து அதில் விளையும் காய்கறிகளை வாரத்தில் ஒரு நாள் சமையலுக்கு பயன்படுத்தி வரப்படுகிறது. மேலும் மாணவிகள் சாப்பிட பயன்படுத்தும் தட்டுகள் வெந்நீரில் சுத்தம் செய்து தரப்படுகிறது.

இதனிடையே ஆய்வுக்கு வந்த சத்துணவு ஒருங்கிணைப்பாளர்கள் கொடுத்த உற்சாகத்தில் சமையல் கூடத்திற்கு என ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பள்ளியின் சமையல் கூடத்தில் 4 முறை ஆய்வு செய்த ஐ.எஸ்.ஓ தரச்சான்று அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என்பதாலும், பணியாளர்களின் நேர்த்தியாலும், உணவின் சுவையாலும், மாணவிகளின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துவதாலும் கடந்த மாதம் இந்த பள்ளியின் சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வழங்கினர்.

தமிழகத்தில் முதன்முறையாக மாநகராட்சி பள்ளி சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் கிடைக்க ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் தலைமையாசிரியர் மாலா நன்றியை தெரிவித்துக்கொண்டார். சமையல் கூடம் மட்டுமின்றி பள்ளியில் ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் தமிழகத்தின் வீர மங்கைகள் பெயரும், பள்ளியின் நேரத்தில் ஏற்படும் மன அழுத்ததை போக்க வகுப்பு அறைகளின் முன் தூரி கட்டி விளையாடவும், மாணவிகளுக்கு இரும்புச்சத்து கிடைக்க முருங்கை சூப் வழங்குதல், டிஜிட்டல் நூலகம் அமைத்தல் என இந்த மாநகராட்சி பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராகவே திகழ்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *