• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அடேங்கப்பா ஓசூர் மேயர் சொத்து மதிப்பு இவ்வளவா ?

ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள சத்யாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக இருந்த பதவிகளுக்கு பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 21 மாநகராட்சி, 138 நகராட்சிகள், 489 பேருராட்சிகளில் 95 சதவீத இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. கும்பகோணம் நீங்கலாக சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 20 மாநகராட்சி மேயராக திமுகவினர் பதவியேற்றனர். சென்னை மேயராக 28 வயது இளம்பெண் பிரியா ராஜன், கோவையில் கல்பனா என 11 பெண்கள் மேயராக பதவியேற்றுக்கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியை பொறுத்தவரையில் திமுக – 21, அதிமுக – 16, இந்திய காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சிகள் தலா – 1, சுயேச்சைகள் 5 பேர் வெற்றி பெற்றனர். 45 வார்டுகள் கொண்ட ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் மறைமுக தேர்தலில் வெற்றி பெற 23 வாக்குகள் வேண்டும், இதனால் யார் மேயர் என்பதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது. ஒருவழியாக திமுக சார்பில் 23 வார்டில் போட்டியிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சத்யா மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

சத்யாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சுயேச்சையாக வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வாக்களித்ததால் 27 வாக்குகள் பெற்று 9 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில், முக்கியமான தகவல் என்னவென்றால், ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்வுக்கான மறைமுக தேர்தலில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் வேட்பாளர்கள் பெயர் அச்சிடப்பட்டிருந்தது.

ஓசூர் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.ஏ.சத்யா தனது பிரமாண பத்திரத்தில் அசையும் சொத்துக்கள் மதிப்பு – ரூ.23 கோடியே 36 லட்சத்து மூவாயிரத்து 305, சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்தின் மதிப்பு -ரூ.1 கோடியே 21 லட்சத்து எட்டாயிரத்து 600, மேம்பாடு மற்றும் கட்டுமானத்திற்கான செலவிடப்பட்ட தொகை 69 லட்சம், சுய சம்பாத்திய சொத்துக்கள் – ரூ.2 கோடியே 5 லட்சம், பரம்பரை சொத்து 15 லட்சம் என மொத்தமாக ரூ.2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கான சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி திமுகவினரே இவ்வளவு தேர்தல் கணக்கிலேயே இவ்வளவு சொத்துக்கள் காட்டப்பட்டுள்ளதா என ஆச்சரியத்துடன் பார்க்கின்றனராம்.