கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ள நிலையில் அவர் முன்னிலையிலேயே தமிழ்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் அண்ணாமலை கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் வாக்குகளை சேகரிக்கும் வகையில் சிவமொக்கா என்இஎஸ் மைதானத்தில் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில முன்னாள் அமைச்சரும், பாஜக சட்டமன்ற உறுப்பினருமான கேஎஸ் ஈஸ்வரப்பா பங்கேற்றார். கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. இருப்பினும் சில நிமிடங்களிலேயே, மேடையில் எழுந்த நின்ற ஈஸ்வரப்பா தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும், அவரின் வற்புறுத்தலின் பேரில் கன்னடதாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கு அண்ணாமலை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.