கனடாவில் சாலை விபத்தில் இந்திய மாணவர் ஒருவர் பலியானார்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகரான டொராண்டோவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த இந்தியர் கார்த்திக் சைனி. 20 வயதான இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டொராண்டோ நகரில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு கார்த்திக் சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த லாரி ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கனடா சென்றதாக அவரது உறவுக்காரர் பர்வீன் சைனி கூறினார். கார்த்திக்கின் உடல் உரிய முறையில் அடக்கம் செய்ய கூடிய விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவரது குடும்பத்தினர் நம்புவதாக பர்வீன் சைனி தெரிவித்தார்.