மதுரையில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மண்டல அலுவலகத்தில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் டம்மி நோட்டுகளுடன் போட்டியிட நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு போட்டியிடக் கூடிய பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வமாக மண்டல அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாநகராட்சி 24 வார்டில் சுயேட்சையாக போட்டியிட உள்ள சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் நூதன முறையில் இன்று ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மண்டலம் 2 அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் கையில் இளம் சிறார்கள் விளையாடுவதற்கு பயன்படுத்தக்கூடிய டம்மி ரூபாய் நோட்டுகளை கையில் வைத்துக்கொண்டு நூதன முறையில் தனது வேட்பு மனுவை இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். இதுகுறித்து சங்கரபாண்டியன் பேசும்போது வாக்காளர்கள் யாரும் வாக்களிப்பதற்கு பணம் வாங்கக் கூடாது எனவும் ஜனநாயக முறைப்படி நேர்மையாக மக்கள் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பதற்கு பணம் வாங்கினால் அந்த பணம் டம்மியாக மாறிவிடும் என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டம்மி ரூபாய் நோட்டுகள் ஒரு மனுத்தாக்கல் செய்தேன் என்று தெரிவித்தார். அதேபோல் மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியில் 82 வார்டில் பல்வேறு அடிப்படை வசதிகள் தற்போது வரை செய்யப்படாமல் உள்ளது என குற்றம் சாட்டினார்.மேலும் மதுரை மாநகராட்சியில் தற்போது நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.