நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். தனித்து போட்டியிடுவது என்பது கடினமான முடிவல்ல, தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளோம். அதிமுகவுடனான இந்தக் கூட்டணி முறிவுக்கு நயினார் நகேந்திரன் பேச்சு காரணம் இல்லை. விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்’ எனத் தெரிவித்தார். இப்படி கூட்டணி முறிவு குறித்த கருத்தை மறுத்து வந்தாலும் அதிமுக மீது ஏறி சவாரி செய்ய விரும்பிய பாஜகவின் எண்ணம் வெளிப்படையாக தெரிந்தது தான் காரணம் என்கின்றது அரசியல் வட்டாரங்கள்.
சட்டமன்றத்தேர்தலில் பாஜக தனது முகத்தை அதிமுகவிற்கு பின்னால் நின்று ஓட்டுகளை அறுவடை செய்தது. இதனை மறந்து விட்டு தான் நயினார் நாகேந்திரன் பேசியதை தமிழக பாஜக கைகட்டி வேடிக்கை பார்த்தது. மேலும் கூட்டணிக்கு டெல்லி தரப்பு அழைக்கப்படவும் இல்லை, இது குறித்த தகவலும் தெரிவிக்கவில்லை.காரணம் டெல்லி பாஜக ஐந்து மாநில தேர்தல்களில் தங்களது முழு கவனத்தை செலுத்தி வருவதால் தமிழகத்தை பெரிதாக கண்டுகொள்ள வில்லை. தற்போது முடிவு எடுக்கும் நிலையில் அண்ணாமலை இருப்பதால் கூட்டணி முறித்துக்கொண்டு தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது சொந்த காசில் சூனியம் வைப்பது போல என்று பாஜகவினரே புலம்பி வருகின்றனராம். நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் , பாமக இது போன்ற கட்சி ஆட்கள் தங்களது பகுதியிலும் இருக்கிறார்களா என்று மக்கள் கேள்வி கேட்க்கும் நிலை தான் பாஜகவிற்கும் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் மத்தியில் இருந்து எந்த ஒரு திட்டம் குறித்து ஆக்கப்பூர்வமாக செய்ததாகவோ மாநில அரசும் கூறவில்லை, மத்தியில் ஆளும் பாஜகவினரும் கூறவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தமிழகத்தில் இவர்கள் தாங்கள் செய்த திட்டங்களை பட்டியலிடுவதை தவிர்த்து திமுக எதிர்ப்பு அரசியல் மட்டுமே செய்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவினர் பாஜகவிற்கு ஒட்டு கேட்டனர். இந்நிலையில் நமக்கு அடுத்தவர்கள் ஒட்டு கேட்டு தான் பழக்கம் , திடீரென்று மக்களிடம் சென்று ஓட்டு கேட்க சொன்னால் எதை கூறி ஓட்டு கேட்பது என்ற கலக்கத்தில் பாஜகவினர் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்.