மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – 2026-யின் தொடக்க விழா வருகின்ற 14.06.2026-அன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அரசுப் பொருட்காட்சியை தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்ற உள்ளார்கள். பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் சிறப்புரை ஆற்றவும் உள்ளார்கள். இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு அரசுத்துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

பல்பொருள் விற்பனை அங்காடிகள்
இந்தப் பொருட்காட்சியில், அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், அவற்றில் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக கண்கவரும் வகையில் அரங்குகள் இடம்பெற உள்ளன. மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதேபோல, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற உள்ளன.
இன்னிசை கலைநிகழ்ச்சிகள்
மேலும், தினந்தோறும் இன்னிசை கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அரசுப் பொருட்காட்சி 14.06.2026-அன்று தொடங்கி 45 நாட்கள் தினமும் மாலை 03.45 மணிமுதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும். அரசுப் பொருட்சியினை பொதுமக்கள் சிரமமின்றி கண்டுகளிக்க கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகத்தில் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.




