நற்றிணைப் பாடல் 41:
பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்த
வெண் புறக் களரி விடு நீறு ஆடி,
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப்
பாஅர் மலி சிறு கூவலின் தணியும்
நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ-
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,
கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி,
சிறு நுண் பல் வியர் பொறித்த
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே.
பாடியவர் இளந்தேவனார்
திணை பாலை
பொருள்:
அவர் பொருள் தேடச் சென்றுள்ளார். அந்தோ! வருந்துவாரே பசுமையான கண்களை உடைய யானை. யானை காலால் உதைத்துக் களர்நிலத்தில் புழுதியைக் கிளப்பும். அந்தப் புழுதி பட்ட மேனியோடு அவர் திரிவார். கல்லுப் பாறையில் கூவல் பள்ளத்தில் தேங்கியிருக்கும் நீரைக் குடித்துக்கொண்டு வருந்துவார். இரவு வேளையில் விருந்து வந்துவிட்டது. ஓம்பினால் புகழ் உண்டாக்கும் விருந்து அது. அவள் அரிவை. ஒளிரும் அணிகலன் பூண்டவள். விருந்துக்கு உணவு சமைத்தாள். விளர்-ஊன் (ஆட்டுக்கறிப் பிரியாணி) சமைத்தாள். புகை நெற்றியில் பட்டு வியர்த்திருந்தாள். வியர்வைத் துளிகளோடு அவள் குறுகுறுவென நடந்துகொண்டிருந்தாள்.