நற்றிணைப் பாடல் 125:
இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி
நல் அரா நடுங்க உரறி கொல்லன்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அகழும்
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம் என
வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை
நல் நாள் வதுவை கூடி நீடு இன்று
நம்மொடு செல்வர்மன் தோழி மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர்
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை
மென் தினை நெடும் போர் புரிமார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே
பாடியவர்: பெயர் தெரியவில்லை
திணை: குறிஞ்சி
பொருள்:
இரை தேடும் ஆண்கரடி புற்றைக் கிண்டும். அப்போது புற்றில் இருக்கும் பாம்பு நடுங்கும். கொல்லன் உலைக்களத்தில் துருத்தி காற்று ஊதுவது போல, கரடி பெருமூச்சு விடும். இப்படிப்பட்ட நள்ளிரவில் நீ வருவது கண்டு அஞ்சுகிறோம். எனவே நல்லதோர் நாளில், திருமணம் (வதுவை) செய்துகொண்டு வாழும்படி வேண்டுகிறோம் என்று சொன்னால் அவர் கேட்கக் கூடியவர்தான். தோழி, சொல்லலாமே. – தலைவி தோழியிடம் கூறுகிறாள். அவர் உழவர் போர்க்களம் போல, ஆட்போர் செய்யும் நாட்டை உடையவர். உழவர் வேங்கைப் பூவைத் தலையில் சூடிக்கொண்டு எருதுகளை ஓட்டிக் களத்தில் போர் அடிப்பர். அந்த நெற்களம் போன்றது அவன் பாசறை. நெற்களத்தில் எருதுகளை ஓட்டுவது போல யானைகள் ஓட்டப்படும் களம் போர்க்களம்.