• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

May 31, 2024

நற்றிணைப்பாடல்: 377

மடல் மா ஊர்ந்து, மாலை சூடி,
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி,
பண்ணல் மேவலமாகி, அரிது உற்று,
அது பிணி ஆக, விளியலம்கொல்லோ அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த
பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல,
அளகம் சேர்ந்த திருநுதல்
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே?

பாடியவர்: மடல் பாடிய மாதங்கீரனார் திணை: குறிஞ்சி

பொருள்:

அகன்ற கரிய ஆகாயத்தின்கண்ணே அரவினாற் சிறிது விழுங்கிக் குறை படுக்கப்பட்ட பசிய கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல; ஒளி வீசுகின்ற கூந்தல் சேர்ந்த சிறிய நெற்றியையுடையாள்; யாம் நினைக்குந்தோறும் எம்மெதிரே தோன்றி எம்மை வினாவி மெலியப் பண்ணாநிற்கும், அதனால் எமக்குக் காமநோய் நனி மிகாநின்றது; அது தீருமாறு பனை மடலாலே செய்த குதிரையேறி நடத்தி ஆவிரை எருக்கம் பூளை உழிஞை என்பனவற்றின் மலரை விரவித் தொடுத்த மாலையணிந்து இடமகன்ற வைப்புக்களையுடைய நாடுகள்தோறும் ஊர்கள் தோறும் சென்று ஒள்ளிய நெற்றியையுடைய அவளது அழகைச் சிறப்பித்துக் கூறி; அம் மடலேறுந் தொழிலில் செல்லேமாகி; எம் முள்ளத்தை அரிதாக நிலைநிறுத்தி அதுவே நோயாகக் கொண்டு கிடந்து; இறந்துபோக மாட்டேமோ? அங்ஙனம் மடலேறிப் பலராலும் இகழப்பட்டுத்தான் முடிய வேண்டும் போலும்! மடலேறுதலினும் உயிர்துறந்தொழிதல் நலனன்றோ?