எங்கள் கால்வாய்க்களுக்கு தண்ணீர் திறக்கவில்லை என்றால் – நாளை வைகை அணையில் தண்ணீர் திறக்க செல்லும் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களை மறித்து போராட்டத்தை நடத்துவோம் என – உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதி விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ள சூழலில் கடந்த செப்டம்பர் மாதமே தண்ணீர் திறந்திருக்க வேண்டிய திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு தற்போது வரை தண்ணீர் திறக்காததைக் கண்டித்தும், திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் பல்வேறு விவசாய சங்க விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.,
இந்த போராட்டத்தில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ கதிரவன் மற்றும் அதிமுக, அமமுக, பாமக, பார்வட் ப்ளாக் கட்சி என பல்வேறு கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.,
மேலும் திருமங்கலம் பிரதான கால்வாயிலும், 58 கால்வாயிலும் தண்ணீரை திறக்க வேண்டி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.,
நாளை வைகை அணையிலிருந்து கள்ளந்தரிக்கு தண்ணீர் திறக்கும் போதே திருமங்கலம் பிரதான கால்வாய் மற்றும் 58 கால்வாய்க்கும் தண்ணீர் திறக்கவில்லை என்றால் தண்ணீர் திறக்க செல்லும் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களை மறித்து சொல்லும் வழியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் சாலை மறியல் போராட்டத்தை நடத்துவோம் எனவும் மாற்று வழியாக சென்றாலும் வைகை அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,