




இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நான் நெருக்கமானவன், இந்தியா- பாகிஸ்தான் மோதலில் தலையிட மாட்டேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளும் இணைந்து பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.

“நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமானவன், பாகிஸ்தானுடனும் மிகவும் நெருக்கமானவன். உங்களுக்குத் தெரிந்தபடி, அவர்கள் காஷ்மீரில் ஆயிரம் ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றனர். ஒருவேளை அதைவிட அதிகமாக கூட இருக்கலாம். இந்தியாவில் நடந்தது ஒரு பயங்கரவாத தாக்குதல். 1,500 ஆண்டுகளாக அந்த எல்லையில் மோதல்கள் நிலவுகின்றன. அது அப்படித்தான் இருந்து வருகிறது. ஆனால் அவர்கள் அதை ஒரு வழியிலோ அல்லது வேறு வழியிலோ தீர்த்துக் கொள்வார்கள் என்று எனக்கு உறுதியாக தெரியும். இரண்டு தலைவர்களையும் எனக்கு தெரியும். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பெரிய மோதல் உள்ளது. எப்போதும் அது இருந்து வருகிறது,” என்று டிரம்ப் கூறினார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியபோது, பயங்கரவாத தாக்குதலை டொனால்ட் டிரம்ப் கடுமையாக கண்டித்தார். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் இந்தியாவுக்கு முழு ஆதரவையும் அவர் தெரிவித்தார்.

