• Thu. Apr 25th, 2024

முதல்வராக வரவில்லை… தோனியின் ரசிகராக வந்துள்ளேன்.. முதல்வர் ஸ்டாலின்

Byமதி

Nov 22, 2021

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டர் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்.

முதல்வர் நிகழ்ச்சியில் பேசும்போது, “முதலமைச்சராக அல்ல, டோனியின் ரசிகனாக பாராட்டு விழாவுக்கு வந்துள்ளேன். நான் மட்டுமல்ல எனது பேரப்பிள்ளைகளும், தலைவர் கருணாநிதியும் டோனியின் ரசிகர்கள்தான். சென்னை என்றாலே சூப்பர் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. நான் இந்த விழாவில் கலந்து கொண்டாலும் வெள்ள பாதிப்பு, நிவாரணப்பணிகள் குறித்தே நான் சிந்தித்து கொண்டிருக்கிறேன்.
நெருக்கடியான காலத்தில் சிறிது நேரம் இளைப்பாறலாம் என்றே இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன்.

நானும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன். சென்னை மேயராக இருந்த போது காட்சி போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். கபில் தேவுக்கு பிறகு இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்றுத் தந்தது டோனி.

டோனியின் சொந்த மாநிலம் ராஞ்சியாக இருந்தாலும், தமிழகத்தின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார். தமிழர்கள் பச்சைத்தமிழர்கள் என்றால் டோனி மஞ்சள் தமிழர். எத்தனை பரபரப்பு இருந்தாலும் எத்தனை நெருக்கடி இருந்தாலும் கருணாநிதியும் டோனியும் கூலாக இருப்பார்கள். டோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களை யாராலும் மறக்க முடியாது. டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் என்றால் டோனிதான்.

ஐபிஎல் போட்டியில் தனது ஆளுமையை நிலை நிறுத்திக்கொண்டவர் டோனி. ஒரு அணியை உருவாக்கியவர்தான் சிறந்த ஆளுமையாக அறியப்படுவார். ஆளுமைத் திறன் கொண்டவராக டோனி இருப்பதால்தான் அனைவராலும் டோனி பாரட்டப்படுகிறார். எப்போதுமே இலக்குதான் முக்கியம். அதை அடைய உழைப்பு தான் முக்கியம். இலக்கும் உழைப்பும் ஒன்று சேர்ந்தால் யாராலும் வீழ்த்த முடியாது. அது அரசியலுக்கும் பொருந்தும். நீங்கள் உங்கள் விளையாட்டை தொடருங்கள், நாங்கள் எங்கள் மக்கள் பணியை தொடர்கிறோம். இன்னும் பல தொடர்களுக்கு சென்னை அணியின் கேப்டனாக டோனி நீடிக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *