சிட்டிசன் படத்தின் இயக்குனர் சரவணன் சுப்பைய்யா திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் மீண்டும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகிறபோது ரங்கராஜ் பாண்டே தவறான பாதையில் போகிறார். தமிழ்மண்ணுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாண்டேவை பார்த்து கூறியவர், லியோனியை சினிமாவிற்கு அழைத்து வந்தது நான் தான் என்றார்
விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:
மீண்டும் சரவணன் சுப்பையா. திறமையுள்ளவர்கள் எல்லாம் ஏன் நடுவில் கொஞ்சம் சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங் களா? சினிமா ஒதுக்கி விட்டதா என்று தெரியவில்லை. சரவண சுப்பையா இயக்கிய சிட்டிசன் படம் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத விஷயங்களை பேசியது. சினிமா பொழுது போக்காக எடுக்கிறோம் அதில் சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர்தான். சிட்டிசன் படத்தில் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குனர் சரவண சுப்பையா. 70. 80 களில் வெற்றியும் கொடுப்போம், தோல்வியும் கொடுப்போம் ஆனால் வெற்றியை மட்டும் மனதில் வைத்துக் கொள்வார்கள்.
வாய்ப்புகள் தொடர்ந்து வரும். இப்போது ஒவ்வொரு படமும் சோதனையானது. ஒரு படம் சறுக்கினாலும் அவ்வளவுதான் நம்மை மறந்துவிடுவார்கள். சரவணன் சுப்பையா மீண்டும் படம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். சிட்டிசன் இயக்குனராக மீண்டும் உங்களை கொண்டு வந்து நிறுத்தும். படத்தின் டிரைலர் ரொம்ப நன்றாக இருந்தது.
படத்தில் ஹீரோவை கொடுமைபடுத்தும் காட்சியும் இருக்கிறது, ஒரு குழந்தையை வைத்து சென்டிமென்ட் காட்சியும் இருக்கிறது. ஹீரோ கதிரவன் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். நன்றாக உழைப்ப வனை சினிமா விடாது. சினிமாவை காதலித்தால் உண்மையான காதலிபோல் அது நம்மை கைவிடாது. ஏதாவது ஒருவிதத்தில் நம்மை பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கும். இங்கு லியோனி வந்திருக்கிறார். முதன்முறை யாக அவரை நான் சினிமாவுக்கு அழைத்து வந்தேன்.
செந்தூரப்பாண்டி படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு காதலா வீரமா என்ற தலைப்பை வைத்து பட்டிமன்றம் நடத்திக்கொடுத்தார். அதேபோல் நாஞ்சில் சம்பத் இங்கு வந்திருக்கிறார். அவர் இருக்கும் மேடையில் நீ எப்படி தைரியமா பேசற என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டி உள்ளது. அடுத்து பாண்டே வந்திருக்கிறார். திறமையானவர் ஆனால் வழிதவறி எங்கேயோபோய்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கிறேன். இவர் தமிழகத்துக்கு தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தால் நல்லது.