• Fri. Mar 29th, 2024

சிவபிரான் சதுரங்கம் ஆடிய வரலாறு…

ByAlaguraja Palanichamy

Aug 1, 2022

தமிழகத்தில் செஸ் தோன்றியதற்கான சான்றாக பார்க்கப்படும் 1,500 ஆண்டுகள் பழமையான சதுரங்க வல்லபநாதர் கோயிலைப் பற்றி பாரதப் பிரதமர் சென்னையில் 44வது உலக சதுரங்க ஒலிங்க ஒலிம்பியாட் தொடங்கி வைத்து பேசிய போது குறிப்பிடத்தக்க கோவிலை பற்றியும் அம்மையும், அப்பனுமாய் சதுரங்கம் விளையாடிய தலம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சுவாமி சதுரங்க வல்லபேஸ்வரர் (வல்லபநாதர்) அம்பாள் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திருப்பூவனூர் கோயில்லை பற்றி நினைவு கூர்ந்தார் பிரதமர். அதனைப் பற்றி விரிவாக நினைவு கூறுகிறார் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி

சதுரங்க வல்லபநாதர் உலகின் முதல் சதுரங்க சாம்பியன் (World’s First Chess Champion)

தல வரலாறு:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 220 சிவாலயங்களில் இது 103 வது தேவாரத்தலம் ஆகும்.தென்பாண்டி நாட்டு அரசன் வசுசேனன் அவன் மனைவி காந்திமதி ஆகியோருக்கு வெகு காலமாக குழந்தை இல்லை.நீண்ட நாட்களாக அவர்கள் சிவபெருமானை வழிபட்டு வந்தனர்.இறைவன் அவர்களுக்கு அருள முன்வந்தார். அரசன் ஒருநாள் நீராடிய குளத்தில் ஒரு தாமரை மலரில் ஒரு சங்கைக் கண்டான்.

இறைவன் திருவருளால் உமாதேவியே அவர்களுக்கு மகளாகப் பிறக்க வேண்டி அங்கு சங்கு ரூபத்தில் அரசன் கண்ணில் தென்பட அரசன் அச்சங்கை கையில் எடுத்தவுடன் அது ஒரு அழகிய பெண் குழந்தையாக உருவெடுக்கக் கண்டு மிகவும் மனம் மகிழ்ந்து அக்குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டு அருமை பெருமையுடன் வளர்த்து வந்தான்.சப்த மாதர்களில் ஒருவரான சாமுண்டிதேவி அக்குழந்தைக்கு வளர்ப்புத் தாயாக வர ராஜராஜேஸ்வரி சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று வளர்ந்தாள்.

கொசுறு தகவல்: சாமுண்டீஸ்வரி: மைசூரிலுள்ள சாமுண்டி மலையை அடுத்து இத்தலத்தில் தான் சாமுண்டீஸ்வரி தனி சன்னதியில் வடக்கு நோக்கி பிரமாண்டமாக வீற்றிருக்கிறாள்.இத்தலத்தில் இறைவனுக்கு சதுரங்கவல்லபநாதர் என்ற பெயர் ஏற்பட ஒரு சுவையான வரலாறு உள்ளது.

குறிப்பாக சதுரங்க விளையாட்டில் மிகவும் புகழ் பெற்று எல்லோரையும் வென்று விளங்கினாள். அரசன் மகளுக்கு மணம் முடிக்க வேண்டி, தகுந்த வரன் அமைய வேண்டும் என்ற நோக்கில் மகளை சதுரங்க விளையாட்டில் வெல்பவருக்கே மணமுடிப்பது என்று தீர்மானித்தான். பல அரசகுமாரர்கள் வந்தனர்.அனைவரும் சதுரங்க ஆட்டத்தில் அவளிடம் தோற்றுப் போனார்கள்.மன்னன் யாராலும் மகளை வெல்ல முடியவில்லையே என்று வருத்தப்பட்டு, இறைவன் மீது பாரத்தைப் போட்டு மகளுடன் தலயாத்திரை கிளம்பிச் சென்றான். அநேக சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருப்பூவனூர் வந்து சேர்ந்தான்.இறைவன் புஷ்பவனநாதரை (உற்சவ மூர்த்தி திருப்பெயர்) (மூலவர் சதுரங்க வல்லப நாதர்) வழிபட்டு கவலையுடன் தன் இருப்பிடம் திரும்பினான். மறுநாள் காலை ஒரு வயோதிகர் அரசனைத் தேடி வந்தார்.

ராஜராஜேஸ்வரியைப் பார்த்து என்னுடன் சதுரங்கம் ஆடி உன்னால் என்னை வெல்ல முடியுமா என்று கேட்டார்.அரசன் மகளும் சம்மதிக்க சதுரங்க ஆட்டம் துவங்கியது.அன்றுவரை இந்த ஆட்டத்தில் தோல்வியே காணாத அவள் அன்று அந்த முதியவரிடம் தோற்றுப் போனாள்.அரசன் மகளை ஒருவர் வென்று விட்டாரே என்று சந்தோஷப்பட்டாலும் ஒரு வயோதிகருக்கு தன் வாக்குப்படி மகளை மனம் முடிக்க வேண்டுமே என்று கவலைப்பட்டான். உள்ளம் உருக சிவபெருமானை தியானித்தான். கண் சிமிட்டும் நேரத்தில் அங்குள்ள முதியவர் மறைந்து அங்கே சிவபெருமான் நிற்கக் கண்டான். இதனால் மகிழ்ந்த மன்னன் தன் மகளை இறைவனுக்கு மணமுடித்து கொடுத்தார்.

இதனால் இத்தலத்து இறைவன் சதுரங்க வல்லப நாதர் எனப்படுகிறார். மன்னார்குடி – நீடாமங்கலம் சாலையில் மன்னார்குடியில் வடக்கே இருந்து சுமார் 12 கி.மி. தொலைவிலும், நீடாமங்கலத்தில் இருந்து தெற்கே சுமார் 4.5 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. திருவாரூர் – நீடாமங்கலம் – மன்னார்குடி செல்லும் பேருந்தில் ஏறிப் பூவனூர் நிறுத்தத்தில் இறங்கி, பாமணி ஆற்றைக் கடந்து சிறிது தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.இவ்வாலயம் தினந்தோறும் காலை 06.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 04-30 மணி முதல் இரவு 08-30 மணி வரையிலும் திறந்திருக்கும்

செஸ் ஒலிம்பியாடுக்காக தமிழகமெங்கும் விழாக்களும், போட்டிகளும் களை கட்டியிருக்கும் சூழலில் சிவபிரான் சதுரங்கம் விளையாடிய வல்லபநாதர் ஆலயத்தை புனரமைத்து, ஆதிகால வரலாற்றை வருங்கால சந்ததியினர் அறியும்படி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வல்லபநாதர் கோயிலில் இருந்து 11 கல்வெட்டுகளை மத்திய அரசின் தொல்லியல் துறையினர் கண்டறிந்து பதிவுச் செய்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, இந்த கோயில் பூவனூர் என்று அழைக்கப்படுவதும், பழமையான கோயில் என்பதும் உறுதியாக தெரிகிறது என குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த பழமையான கோயிலில், சிவன் சதுரங்கம் விளையாடினார் என்பது ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் ஒரு செவிவழிச் செய்தியாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். சிவபிரான் சதுரங்கம் ஆடிய சிற்பமும் கோயிலில் இன்றளவும் காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *