77 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வீழ்த்த அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகாசாக்கி நகரங்களில் அணுக்குண்டு வீசப்பட்டது. அதில் 226,000 பேர் வரை மாண்டதாக நம்பப்படுகிறது. மாண்டோரில் பெரும்பாலோர் பொதுமக்களே. அவர்களில் சிறுவர்கள், முதியோர் என எளிதில் பாதிப்படையக்கூடியோர் பலரும் இருந்தனர். உலக வரலாற்றில் போரில் அணுஆயுதம் பயன்படுத்தப்பட்ட ஒரே தருணம் ஹிரோஷிமா, நாகாசாக்கி நகரங்களில் 6 ஆகஸ்ட் 1945 முதல் 9 ஆகஸ்ட் 1945 வரை இந்த கோர தாண்டவம் அரங்கேறியது. இரு நகரங்களிலும் குண்டு ஒரேயொரு முறை தான் வீசப்பட்டது. இருந்த போதும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அங்கு வாழும் மக்கள் இன்று வரை கதிர்வீச்சினால் உடல்நலப் பாதிப்பு, மெதுவான மூளை வளர்ச்சி, புற்றுநோய், உடற்குறையுடன் பிறத்தல் போன்ற பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.