சிவகங்கை மாவட்டத்தில் 300 கி.மீ., தூரத்திற்கு மாபெரும் தூர்வாரும் பணியினை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், வருகின்ற வடகிழக்கு பருவமழையின் போது குளங்கள் மற்றும் கண்மாய்களில் முழு அளவு தண்ணீரைத் தேக்கிடும் விதமாக நகராட்சி, பேரூராட்சி, ஊரகப்பகுதிகள் ஆகியவற்றில் இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு மாபெரும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
இதனை செயல்படுத்தும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவக்கோட்டை ஆகிய நகராட்சிகளிலும், 12 பேரூராட்சிப்பகுதிகளிலும், 445 ஊராட்சிகளிலும் நடைபெறும் மாபெரும் தூர்வாரும் பணியினை சிவகங்கையில் மன்னர் மேல்நிலைப்பள்ளி அருகே, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டடி தொடங்கி வைத்தார்.
அப்போது ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, சிவகங்கை மாவட்டத்தில் 3 நகராட்சிகளிலும் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மழைக்காலத்தில் பெறுகின்ற தண்ணீர் விவசாயத்திற்கு பயன்பெறுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திடவும், போதியளவு குடிநீர் தேவைகளுக்கும் இத்தகைய திட்டம் பயனுள்ளதாக இருக்கும் எனவும், மழைக்காலங்களில் நகரில் தண்ணீர் தேங்காமல் வடிகால் வாய்க்கால் வழியாக குளங்களுக்கு செல்லும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.