டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து யூ டியூபை விட்டு வெளியேறுவதாக கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
டிக்டாக்கில் பிரபலமாகிய பின்னர் அந்த செயலி தடை செய்யப்பட்டதும் பல பேர் சொந்தமாக யூ டியூப் சேனலை தொடங்கி செல்வாக்கை தக்க வைத்துக்கொண்டனர். அதில் ஜி.பி.முத்து மிக பிரலமானவர். யூ-டியூப் மூலமாக கல்லா கட்டுவது மட்டுமின்றி, பிரபல டிவி நிகழ்ச்சிகள், யூ டியூப் சேனல்கள் என அழைப்புகள் வீடு தேடி வருகின்றன.
ஜி.பி.முத்துவிற்கு பட வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் நடிக்கும் திகில் படத்திலும், பிக்பாஸ் பிரபலமான வனிதாவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படி பல பரிமாணங்களில் வளர்ந்து வரும் ஜிபி முத்து தற்போது கண்ணீர் மல்க பேசி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
”செத்த பயலே, பேதியில போக” என்று கண்டபடி திட்டி வீடியோ வெளியிட்டு வந்த ஜிபி முத்துவை பல பேர் கமெண்டில் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டி வருவதால் மனமுடைந்தவர், இனிமேல் வீடியோ வெளியிட மாட்டேன் என்றும் யூ டியூபை விட்டே வெளியேறுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஒரு காலத்தில் தனது பிள்ளைகள் கேட்கும் உணவை கூட என்னால் வாங்க முடியாமல் பிச்சை எடுத்துள்ளேன் என்றும் நான் சந்தித்த கஷ்டமான அனுபவங்களை தெரிந்துகொள்ளாமல் இப்போது என்னை பலரும் மட்டம் தட்டி பேசுவதாகவும் ஜிபி முத்து அழுகையுடன் கூறியுள்ளார்.
நான் பிச்சை எடுக்கும்போது எனக்கு உதவ வராதவர்கள் இப்போது பிரபலமான பின்னர் ” ஜிபி முத்து மாறிவிட்டார், அவருக்கு லக் அடித்துவிட்டது” என்றெல்லாம் போகிறபோக்கில் கமெண்ட் அடிக்கின்றனர் என்று அவர் வேதனையாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், யூ டியூப் கணக்கை முடக்கிவிட்டு பழைய வாழ்க்கைக்கே திரும்புவதாகவும், அதுதான் பலரும் விரும்புவதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.