

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கும் வகையில், மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்த மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த ஜனவரி 10.ம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் திருத்தங்கள் இடம்பெற்று இருந்தன.

அதன்படி பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். குறிப்பாக 5 ஆண்டுகளுக்கு பிணை கிடையாது. ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு கொடுங்காயத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை, கடுங்காவல் சிறைத் தண்டனை அல்லது மரணதண்டனை விதிக்கப்படும். ஆசிட்டை வீசுபவர்களுக்கும், வீச முயற்சிப்பவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் ஆயுள் காலம் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.
பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதனை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க உள்ளார்.

