முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரும் வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்றது.
அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த இந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்தை தடை செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது. ஆணையம் வெறும் 200 சதுர அடியில் இயங்கி வருவதற்கு நீதிபதிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
சமையலறை அளவுகூட இல்லாத இடத்தில், ஆணையம் செயல்படுவதா? என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆறுமுகசாமி ஆணையம் செயல்படுவதற்கான போதுமான மாற்று இடத்தை செவ்வாய்கிழமைக்குள் ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் ஆணைய விசாரணை தொடர்பாக, செய்தி சேகரிக்க செல்லும் அனைத்து செய்தியாளர்களையும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
அதை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு, சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள கலச மஹாலில் செயல்பட்டு வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் இடத்தை 200 சதுர அடியில் இருந்து 500 சதுர அடியாக உயர்த்தும் வகையில் பொதுப்பணித்துறை கடந்த வாரம் அளவிட்டு பணிகளை மேற்கொண்டுள்ளது.
எனவே, ஆணையத்திற்கு கூடுதல் இடம் கிடைக்கப் பெற இருக்கிறது. விரைவில் உச்ச நீதிமன்றம் ஆணையத்தின் மீதான தடையை நீக்கியுடன், விரைவில் ஆணையத்தின் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.