• Sat. Apr 27th, 2024

தமிழக அரசு பெட்ரோல்‌, டீசல்‌ விலையைக்‌ குறைக்க வேண்டும்‌ – ஈபிஎஸ்

Byமதி

Nov 5, 2021

தமிழகமெங்கும் நல்ல மழை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. எனவே, பருவ மழையால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌ தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், பாதிப்படைந்த பயிர்களைக் கணக்கிட்டு, பயிர்‌ இழப்பீட்டை உடனே அறிவிக்குமாறும், திமுகவின்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ அறிவித்தவாறு, உடனடியாக பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ விலையைக்‌ குறைக்க வேண்டும்‌ என்றும் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கான உரங்கள்‌ அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும்‌, போதுமான அளவு உரங்கள்‌ இல்லை என்றும்‌, பல இடங்களில்‌ உரங்கள்‌ அதிக விலைக்கு விற்கப்படுகின்றன என்றும்‌, ஊடகங்களிலும்‌, நாளிதழ்களிலும்‌ செய்திகள்‌ வருவதைச் சுட்டிக்காட்டி, உரங்களின்‌ இருப்பை உறுதி செய்வதோடு, அதிக விலைக்கு விற்பவர்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கவும்‌ கூறினோம்‌. ஆனால்‌, எப்போதும்‌ போல்‌ திமுக அரசு உரங்கள்‌ இருப்பில்‌ உள்ளன, அதிக விலைக்கு விற்கப்படவில்லை என்று தெரிவிக்கிறது.

தமிழகத்தில்‌ தற்போது பருவமழை அதிகம்‌ பெய்துவரும்‌ காரணத்தினால்‌, விவசாயிகள்‌ பெரும்‌ நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்‌. சென்ற ஆண்டு பருவமழை மற்றும்‌ இயற்கைச்‌ சீற்றத்தின்‌போது, அதிமுக அரசில்‌, அமைச்சர்‌ பெருமக்கள்‌ மற்றும்‌ அதிகாரிகளுடன்‌, நானே பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக ஆய்வு செய்து, உடனுக்குடன்‌ நிவாரணம்‌ வழங்க உத்தரவிட்டேன். பயிர்ப்‌ பாதுகாப்புத் திட்டத்தின்‌ கீழ்‌ உரிய நிவாரணம்‌ பெற்றுத்‌ தரவும்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால்‌, இந்த அரசு இதுவரை விவசாயிகளின்‌ துயரத்தைத்‌ தீர்க்கவும்‌, வயல்களில்‌ தேங்கியுள்ள தண்ணீரை அகற்றவும்‌ எந்த நடவடிக்கையும்‌ மேற்கொண்டதாகத்‌ தெரியவில்லை; செய்திகளும்‌ வெளிவரவில்லை.

03.11.2021 அன்று மத்திய அரசு பெட்ரோல்‌ லிட்டருக்கு 5 ரூபாயும்‌, டீசல்‌ 10 ரூபாயும்‌ குறைக்கப்படும்‌ என்று அறிவித்துள்ளது. இதைத்‌ தொடர்ந்து பல மாநிலங்கள்‌, தங்கள்‌ மாநிலத்தின்‌ சார்பில்‌ வசூலிக்கும்‌ பெட்ரோலுக்கும்‌, டீசலுக்குமான மாநில வாட்‌ வரியைக்‌ குறைத்துள்ளன. ஆனால்‌, இந்த திமுக அரசு தனது தேர்தல்‌ அறிக்கையில்‌ கூறியவாறு பெட்ரோல்‌, டீசல்‌ விலையைக்‌ குறைக்காமல்‌, பெட்ரோலுக்கு மட்டும்‌ சிறிதளவு மாநில வாட்‌ வரியைக்‌ குறைத்துள்ளது. எனவே, தமிழக மக்களின்‌ நலனைக்‌ கருத்தில் கொண்டு, உடனடியாகத் தேர்தல்‌ அறிக்கையில்‌ அறிவித்தவாறு பெட்ரோல்‌, டீசல்‌ விலையைக்‌ குறைக்க வேண்டும்‌ என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்‌.

பருவ மழையால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌ தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்றவும்‌; பாதிப்படைந்த பயிர்களைக் கணக்கிட்டு, பயிர்‌ இழப்பீட்டை உடனே அறிவிக்குமாறும்‌, தேவையான அளவு உரங்கள்‌ சரியான விலையில்‌ வேளாண்‌ பெருமக்களுக்குக் கிடைக்கவும்‌; கூட்டுறவு சங்கங்களில்‌ அனைத்து உறுப்பினர்களுக்கும்‌ பயிர்க்‌ கடன்‌ கிடைத்திடும்‌ வகையில்‌ சங்கங்களின்‌ நிதி இருப்பை உயர்த்திடவும்‌, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்‌ என குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *