தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்ஸி) செயலாளராக கோபாலசுந்தரராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக கோபால சுந்தரராஜ் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு செயலாளரும், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருமான அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ். அறிவித்துள்ளார்.
முன்னதாக உமா மகேஸ்வரி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ஆக இருந்த நிலையில் தற்போது மாற்றப்பட்டுள்ளார். கோபாலசுந்தரராஜ் ஐ.ஏ.எஸ், வணிக வரித்துறை இணை இயக்குநர், தென்காசி கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
தமிழகத்தில் ராமநாதபுரம், கீழக்கரை அருகே மாவிலை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால சுந்தரராஜ். தமிழ் வழியில் கல்வியை முடித்தவர். ராஜஸ்தானில் விஞ்ஞானியாகப் பணியாற்றிய அவர், குடிமைப் பணியின் மீது ஆர்வம் கொண்டு, பணியைத் துறந்தார். தன்னுடைய மூன்றாவது முயற்சியில் அகில இந்திய அளவில் 5-ம் இடத்தைப் பிடித்து ஐ.ஏ.எஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.