பெட்ரோலுக்கான வாட் வரியை டெல்லி அரசு 30 சதவீதத்திலிருந்து 19.40 சதவீதமாக குறைத்து உள்ளது. இதனால், நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8 குறைகிறது.
மத்திய அரசு கடந்த நவம்பர் 4-ஆம் தேதி பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் நீண்டகாலமாக கோரிக்கையான பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும் குறைத்தது. இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் எரிபொருள் மீதான வாட் வரி குறைத்தன.
இந்நிலையில் டெல்லி அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியானது 30 சதவீதத்திலிருந்து 19.40 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதன்மூலம், பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 8 குறையும். இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103.97 ரூபாக்கு விற்பனையான நிலையில், இந்த வரி குறைப்பால் நாளை முதல் டெல்லியில் பெட்ரோல் விலை 95.97 ரூபாய்க்கு விற்பனை ஆகும். டெல்லியில் டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் டீசல் விலை அங்கு ரூ.86.67 ஆக உள்ளது.
மத்திய அரசின் கலால் வரி குறைப்பு அறிவித்தும் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்ப்படாமல் உள்ளது. இந்தநிலையில், சர்வதேச கச்சா எண்ணெயின் விலை கடந்த சில நாட்களாக 10 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. எனவே, வரும் நாட்களில் எரிபொருள் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.