வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது, மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் உலகளாவிய சந்தைகளில் பெரிய அளவில் ஸ்திரமற்ற தன்மை உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் காணப்படுகின்றன. பல பெரிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ரஷ்யா உக்ரைன் போரின் துவக்கம் முதலே தங்கத்தின் விலையில் அதிக ஏற்றம் இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம். எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 85 அதிகரித்து ரூ. 5055 ஆக அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 680 அதிகரித்து 40,440 ரூபாயில் விற்பனையில் உள்ளது.