• Fri. Mar 29th, 2024

காதலனை விஷம் வைத்து கொன்ற காதலி கைது

ByA.Tamilselvan

Oct 31, 2022

தனது திருமணத்திற்கு இடைஞ்சலாக காதலன் இருந்ததால் விஷம் வைத்து கொன்ற காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் எல்லை பகுதியான பாறசாலை பகுதியில் வசித்து வருபவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்தார். அப்போது களியக்காவிளை அருகே உள்ள ராமன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகிவந்த நிலையில், இளம்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி ஷாரோன் ராஜை அவரது காதலி போனில் அழைத்து, பெற்றோர் வெளியே சென்று விட்டதால் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர் தன்னுடைய நண்பருடன் காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் ஷாரோன்ராஜ் தனது நண்பரிடம் வயிறு வலிப்பதாகவும், தனது காதலி குடிப்பதற்கு கசாயமும், குளிர்பானமும் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் வயிற்றுவலி அதிகமானதால் ஷாரோன் ராஜ் பாறசாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கடந்த 25ம் தேதி சிகிச்சை பலனின்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை ஜெயராஜன் பாறசாலை போலீசில் கொடுத்த புகாரில், தனது மகனை அவனது காதலியும், பெற்றோரும் சேர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என தெரிவித்திருந்தார். பின்னர் இந்த வழக்கு கேரள குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்படி திருவனந்தபுரம் குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு ஜான்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். இந்தநிலையில் ஷாரோன்ராஜின் காதலி கிரீஷ்மா மற்றும் அவரது பெற்றோர் உள்பட 4 பேர் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணைக்காக நேற்று காலை 9 மணிக்கு ஆஜராகினர். அதன்படி போலீசார் காதலியிடம் 5 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கிரீஷ்மா, ஷாரோன் ராஜியை காதலித்து வந்தநிலையில் அவரது பெற்றோர் ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அறிந்த அதிர்ச்சியடைந்த காதலன் ஷாரோன் ராஜ், கிரீஷ்மாவிடம் தன்னை ஏமாற்றி விட்டாயே என கதறி அழுதுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணத்துக்கு ஒப்பு கொண்டதாக கிரீஷ்மா, ஷாரோன்ராஜிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்திற்கு இடைஞ்சலாக ஷாரோன்ராஜ் வரலாம் என்ற சந்தேகம் கிரீஷ்மாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கொன்று விடலாம் என்ற கொடூர எண்ணம் அவருக்கு உருவானது. அதன்படி காதலி அவரை வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் ரப்பர் மரத்துக்கு அடிக்கும் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. அதை தொடர்ந்து போலீசார் கிரீஷ்மாவை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் அவரது பெற்றோருக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து மாணவரை அவரது காதலியே தீர்த்துக் கட்டிய சம்பவம் குமரி மற்றும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *