தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 153 வது ஆண்டு காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜரின் 47 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கழுகுமலை காந்தி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். கழுகுமலை நகர தலைவர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் மரியதங்கராஜ் வரவேற்றார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி மற்றும் காமராஜரின் உருவ படத்திற்கு நிர்வாகிகள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் காமாட்சி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், ஐஎன்டியூசி தலைவர் மகாலிங்கம், நகர பொருளாளர் ஜான்வின்சென்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.