• Fri. May 3rd, 2024

டில்லியில் ஜி20 மாநாடு பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு..!

Byவிஷா

Aug 26, 2023

டில்லியில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தலைநகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் 17 வது உச்சி மாநாடு இந்தோனோசியா தலைநகர் பாலி நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இறுதியில் ஜி-20 நாடுகள் குழுவின் தலைவர் பதவி இந்தியாவிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து ஜி20 மாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு உள்பட மாநிங்களில் நடைபெற்று வந்தன. வெளியுறவுத் துறை, பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை என 32 துறைகள் தொடர்பாக 200 கூட்டங்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு நடத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டில்லியில் வரும் செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாட்டின் அதிபர்களும் இந்தியா வருகின்றனர். இதனால் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது,. பிரம்மாண்டமாக, மிகுந்த பாதுகாப்புடன் இந்த மாநாடு நடைபெற உள்ளதால், பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் அரசு பள்ளி கல்லூரிகள், நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி, டெல்லி மாநில அரசின் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்..,
வரும் செப். 8 முதல் 10 வரை ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல,  டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அந்த நாட்களில் உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜி20 மாநாட்டை முன்னிட்டு உச்சநீதி மன்றத்திற்கு வரும் செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் விடுமுறை குறித்த அறிவிப்பை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வெளியிட்டுள்ளார்.
டில்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. டெல்லி காவல்துறை பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவுள்ளது. ஜி20 மாநாடில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இச்சமயங்களில் மத்திய அரசின் மீதான விமர்சனங்கள், ஜி20 மாநாட்டின் மீதும் எழும் வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. எனவே டெல்லி காவல்துறை சார்பில் சமூக வலைதளங்கள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில் புரளி பரப்புவோரை தடுக்கும் பொருட்டு பல குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
ஜி20 பாதுகாப்பு பணியில் காவல்துறையின் சுமார் 60 துணை ஆணையர்கள் அமர்த்தப்பட உள்ளனர். இச்சமயங்களில் பெண் களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மீது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு உடனடி நடவடிக்கை எடுக்க துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இவர்களுடன், விக்ராந்த் சிறப்பு வாகனங்களும் தயார்நிலையில் வைக்கப்பட உள்ளன. போக்குவரத்து மாற்றங்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. மாநாடு நாட்களில் டெல்லி எல்லைகள் ‘சீல்’ செய்யப்பட்டு அத்தியாவசிய தேவை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும். மக்கள் அதிகம் கூடும் மால்கள், திரையரங்குகள், புனிதத் தலங்கள், மார்க்கெட்டுகள், தங்கும் விடுதிகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
மத்திய படைகளில் ஒன்றான ஐடிபிபியின் கேரளா மற்றும் மத்தியபிரதேச பயிற்சி நிலையங்களில் ஸ்வாத் கமாண்டோக்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை டெல்லி காவல்துறை சார்பில் பெற்று சமீபத்தில் திரும்பிய 19 பெண் கமாண்டோக்களும் மாநாட்டு பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *