• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அம்மா உணவகங்களில் இலவச உணவு

Byவிஷா

Oct 16, 2024

சென்னையில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, இன்றும் நாளையும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கிட, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பெரும்பாலான இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உணவகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உணவுக்காக அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்..,
பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். அதேநேரம், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்கள் உணவு அருந்தும் அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், மீட்பு பணியின் ஒரு பகுதியாக, நிவாரண மையங்கள், உணவுக் கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு. மக்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கும் பணியையும் கையாண்டது அரசு. தற்போது எத்தனை பேருக்கு உணவு வழங்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் மொத்தம் 198 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 28 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிவாரண முகாம்களில் நேற்று முதல் இன்று காலை வரை மொத்தம் 2395 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிவாரண முகங்களில் நூறு சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சமுதாய உணவகத்தின் மூலம் நேற்று மற்றும் இன்று காலை, மதியம், இரவு என மூன்று வேலைகளிலும் இதுவரை 7.18 லட்சம் உணவு பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மொத்தமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.