

மதுரை வலையங்குளத்தில் நேற்று முன்தினம் (ஆக.20) நடைபெற்ற மாநாட்டின் போது, உணவுகளை மாநாட்டுப் பந்தலில் கொட்டியதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை வலையங் குளத்தில் கடந்த 20 தேதி அதிமுக மாநாடு நடைபெற்றது. இதற்காக அதிமுக கட்சி சார்பில் தொண்டர்களுக்கு உணவு வழங்க புளியோதரை மற்றும் சாம்பார் சாதம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் புளியோதரை, சாம்பார் சாதம் தரம் அற்ற முறையிலும் அரைவேக்காட்டுத்தனமாக இருந்ததால் அதிமுக தொண்டர்கள் வாங்கி சாப்பிடாமல் கீழே கொட்டினர். அதிமுக தொண்டர்கள் யாரும் உணவு வாங்காததால் மாநாட்டு பந்தலிலே சுமார் 1 டன் அளவிற்கு சமையல் செய்த புளியோதரை, சாம்பார் சாதம் உணவு நேற்று கொட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஊடகங்கள் மூலம் சுகாதாரம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், அதிமுகவினர் நேற்று நள்ளிரவில் புல் டோசர் மூலம் குழி தோண்டி வீணான புளியோதரை சாதத்தில் மண்ணை அள்ளி மாநாட்டுத் திடல் அருகே குவித்துள்ளனர். பொதுவாக ஒரு பழமொழி உண்டு ஒருவருக்கு ஆகாதவர் ஏதாவது இடைஞ்சல் செய்தால் திங்கிற சோற்றில் மண்ணை அள்ளி போட்டாயே என கூறுவார்கள் அந்த பழமொழிக்கு ஏற்ப அதிமுகவினரே சோற்றில் மண்ணை அள்ளி போட்டுள்ளனர் என பொதுமக்கள் விமர்சனம் செய்கின்றனர்
மாநாட்டு பந்தலில் கொட்டப்பட்ட உணவுகளால் சுகாதார சீர்கேடு சர்ச்சைகளுக்கு சுகாதாரத் துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா என்பதால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

