மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சூழல் சுற்றுலா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கோவை, சாடிவயல் பகுதியில் அமைந்து உள்ள கோவை குற்றாலம் அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அருவிக்கு வரும் நீரின் அளவு திடீரென அதிகரித்து, நீர்வீழ்ச்சியில் அபாயகரமான முறையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள சூழலில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இன்று (25/08/2026) முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தெரிவித்து உள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்கு நேரில் சென்று ஏமாற்றம் அடைவதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மழை குறைந்து அருவியில் நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகே, சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்து உள்ளது.




